அரசியல் தீர்வு விடயத்திலாவது ஒன்றிணைந்து செயற்படுங்கள் கூட்டமைப்பிடம் இந்தியா வலியுறுத்து.

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அதிகாரப் பரவலாக்கல் இடம்பெற வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா பின்வாங்கவில்லை. உடனடியாக தேர்தலை நடத்தி, மாகாண சபை முறையை அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை இலங்கை அரசுக்கு வழங்குகின்றோம். எனினும், 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு வேண்டும் என்ற ஒரு விடயத்திலாவது தமிழ்த் தரப்புகள் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இந்த விடயத்தில் தமிழ்த் தரப்புகளின் கோரிக்கை அழுத்தமாக இல்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் நேரில் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லா.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் எம்.பி., மாவை சேனாதிராஜா (முன்னாள் எம்.பி.), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., த.சித்தார்த்தன் எம்.பி. மற்றும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது:-

“கோட்டாபய அரசு இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளிற்கு தயாராக இல்லை. இந்திய – இலங்கை உடன்படிக்கையின்படி அமுல்படுத்தப்பட வேண்டிய 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவும் தயாராக இல்லை. போரின் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் 13 பிளஸ் பற்றி மஹிந்த அரசு பேசியிருந்தாலும், இப்போது தலைகீழாகச் செயற்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தல்களை பிற்போட்டு, ஆளுநர்களின் ஆட்சியைத் தொடர்ந்து, மாகாண சபை ஆட்சி முறையை வலுவிழக்க செய்யும் நோக்கத்துடனேயே செயற்படுகிறார்கள். மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆளும்தரப்பு மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து எழும் கோரிக்கையை சமாளிக்க, வரவு – செலவுத் திட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாகாண சபை தேர்தல்களை மேலும் பின்தள்ளும் நோக்கத்துடனேயே அரசு செயற்படுகின்றது.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனில், ஆகக்குறைந்தது 13 பிளஸ் ஆவது அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு” – என்றனர்.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர்,

“13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. மாகாண சபை முறைமையை செயலிழக்கச் செய்யும் இரகசிய நிகழ்ச்சி நிரலில் அரசு செயற்பட முனைவதும் இந்தியாவுக்குத் தெரியும். அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்துக் கொண்டிருக்கின்றது.

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

இதற்கு இந்தியா மட்டும் அழுத்தம் கொடுப்பது போதாது. தமிழ் தரப்புகளின் குரலும் வலுவாக ஒலிக்க வேண்டும். 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாணசபை முறைமையை அமுல்படுத்த வேண்டும் எனத் தமிழ்த் தரப்புகள் வலுவாக, ஒரே குரலில் கூற வேண்டும். இப்போது தமிழ்த் தரப்புகளில் இருந்து வரும் குரலின் அழுத்தம் போதாதென இந்தியா கருதுகின்றது.

தமிழ்த் தரப்புகளிடம் எத்தனை அணிகள் இருந்தாலும், குறைந்த பட்சம் இந்த விடயத்திலாவது, ஒரே குரலில் பேச வேண்டும் என்று இந்தியா கருதுகின்றது.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும்படி இலங்கை மீது நாம் அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பங்களில், 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை தமிழ் தரப்புக்கள் அதிகம் வலியுறுத்துவதில்லை எனவும், தேர்தல் சட்டத் திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையாக உள்ளது எனவும் அரச தரப்பில் கூறப்பட்டு வருகின்றது” – என்றார்.

எனினும், இந்த விடயத்தில் அரசு பொய்யுரைக்கின்றது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலாவாரியாக விளக்கியது.

13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை தமிழ்த் தரப்புகளில் பெரும்பாலானவர்கள் வலியுறுத்துகின்றனர் எனவும், கூட்டமைப்பினர் அதைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், தேர்தல் திருத்தத்துக்கு சாதாரண பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றினாலே போதும் என்ற விடயத்தையும் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தினர்.

அத்துடன், வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களில் இந்தியா தொடர்ந்து முதலிட வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரியது.

ஏற்கனவே, இந்திய அபிவிருத்திகள் வடக்கு, கிழக்கில் அதிகளவில் நடப்பதை சுட்டிக்காட்டிய இந்திய வெளிவிவகார செயலாளர், அது எதிர்காலத்திலும் தொடரும் என்றும் உத்தரவாதமளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.