இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் நடுக்கடலில் படுகொலை – சீமான் கண்டனம்

இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம் என்று கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன்பிடி படகினை தாக்கி புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரணை நடுக்கடலில் மூழ்கடித்துப் பச்சைப் படுகொலை செய்த இலங்கை கடற்படையின் இனவெறி அட்டூழியச் செயலானது பொறுக்கவியலா கடும் ஆத்திரத்தையும், பெரும் மனவேதனையும் அளிக்கிறது. தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறி, மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களுக்குச் சொந்தமான கட்சத்தீவைஇந்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்த காலம் தொட்டே, இலங்கை கடற்படையால் தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் செயல்கள் தொடங்கிவிட்டன. 2009 ஆம் ஆண்டு ஈழ விடுதலை போராட்டத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் துணையுடன் இரண்டு இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்து, இலங்கை இனவெறி அரசு ஒடுக்கிய பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைதுகளும், படகுகள், வலைகள் உள்ளிட்ட உடைமைகளை பறித்து வைத்துக்கொள்வதும் நாளுக்குநாள் அதிகரித்து வந்த வண்ணமேயுள்ளன.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள இனவெறி இராணுவம் சிறைபிடிப்பது, கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, படகுகள், மீன்களை பறித்துக்கொள்வது, உடைமைகளை அபகரித்துக்கொள்வது, வலைகள், படகுகளைச் சேதப்படுத்துவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது, என அரங்கேற்றிய கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல. மத்தியில் காங்கிரசு ஆண்டபோதும், அதன் பிறகான பாஜக ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்துவரும் தமிழக மீனவர்கள் தாக்குதல்களை நிறுத்த, அணுவளவும் ஆட்சியாளர்கள் முயற்சி செய்ததில்லை.

அதன் நீட்சியாகத் தற்போது புதிதாகத் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும் ‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை’ என்பதற்கேற்ப மீனவர்கள் மீதான கொடுந்தாக்குதலானது நின்றபாடில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் எந்த ஆட்சி வந்தாலும், அதிகார மாற்றம் எத்தனை முறை நிகழ்ந்தாலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்கள் மட்டும் தொடர்கதையாக மாறி வருவதும், அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது ஆளும் ஆட்சியாளர்கள், ஒப்புக்கு கடிதம் எழுதிவிட்டு கடமை முடிந்ததாய் அமைதியாகக் கடந்துபோவதும் தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. சிங்களப்பேரினவாத அரசு ஈவிரக்கமற்று தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்படுத்தி வன்முறையிலும், அத்துமீறல்களிலும் ஈடுபட்டு வருவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

தமிழர்களை மிக இழிவாகக் கருதி, அவர்களது உயிர், உடைமைகள், உரிமைகள் ஆகியவை குறித்து எவ்வித அக்கறையுமற்ற நிலையை முன்னெடுத்து, சிங்களப் பேரினவாதத்தைக் கண்டிக்க மறுத்து, அவர்களுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் ஆட்சிமுறையும், அலட்சியப்போக்குமே இத்தாக்குதல்களுக்குக் காரணமாகும். மேலும் கடந்த மே மாதம் திமுக அரசு பொறுப்பேற்றபோதே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்திய இலங்கை கடற்படை, கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் , கொலைவெறித் தாக்குதலும் நடத்தியது.

இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் இலங்கை கடற்படையால் 23 நாகை மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அப்போதே மத்திய அரசிற்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து இலங்கை இனவாத அரசிற்கு உரிய நெருக்கடியை கொடுக்கத் தவறிய திமுக அரசின் அலட்சியமும், செயல்படாத்தன்மையுமே தற்போது மீனவர் ராஜ்கிரண் படுகொலை செய்யப்பட முக்கியக் காரணமாகும். எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் துள்ளத்துடிக்கப் படுகொலை செய்யப்பட்டும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்தும், தமிழக மீனவர்களின் பல கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்ட போதும் நாட்டையாளும் ஆட்சியாளர்கள் அதனைத் துளியும் பொருட்படுத்துவதுமில்லை; எவ்வித எதிர்வினைகள் ஆற்றுவதுமில்லை.

உலகில் எந்த ஒரு நாடும் தனது நாட்டுக் குடிகள், அந்நிய நாட்டு இராணுவத்தால் தாக்கப்படுவதை இப்படிச் சகித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிராது. இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் உலகின் நான்காவது மிகப்பெரிய இராணுவத்தை வைத்துள்ள இந்திய அரசு, இலங்கை அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காது அமைதி காப்பது சொந்த நாட்டு மீனவர்களின் உயிர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணும் அலட்சிய மனப்பான்மையின் வெளிப்பாடாகும். இலங்கை அரசைக் கண்டிக்காது, ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் வஞ்சக அமைதி என்பது இந்நாட்டின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு இழைத்திடும் பச்சைத்துரோகமாகும்.

சொந்த நாட்டு மக்களை இப்படிச் சாகக் கொடுத்து வஞ்சித்து, அதற்கு இலங்கை நட்பு நாடு எனக் காரணம் காட்டுவது இந்நாட்டின் இறையாண்மையைப் பறிகொடுத்திடும் கொடுஞ்செயலாகும். ஆகவே, இதுபோல இனி ஒரு மீனவரின் உயிர் பறிக்கப்படாமல் தடுக்க வேண்டியது ஒன்றிய, மாநில அரசுகளின் பொறுப்பும் கடமையும் என்பதை இனியாவது உணர்ந்து இலங்கை அரசுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவை உடனடியாக இந்திய அரசு துண்டிக்க வேண்டும்.

தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள எண்ணிக்கை பலத்தைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு மூலம் தமிழ்நாடு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதோடு, உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விரைவுபடுத்திக் கட்சத்தீவை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த தம்பி இராஜ்கிரண் குடும்பத்திற்கு உரிய நிதியுதவியும், சிறைபட்ட மீனவர்களை விரைந்து சிறைமீட்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளும் அளிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.