பட்லர் அதிரடியில் ஆஸியை பந்தாடியது இங்கிலாந்து.

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஃபிஞ்ச் 44 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் – ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் ராய் 22 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பட்லர் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 11.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 71 ரன்களைக் குவித்து அசத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.