கேப்டன் பதவியிலிருந்தும் விராட் கோலி நீக்கம்!

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி சொதப்பி வருகிறது.
முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில் நியூசிலாந்திடமும் தோல்வி மட்டுமே மிஞ்சியது. இதனால் அரையிறுதி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு இது மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஐசிசி தொடர்களில் இதுவரை ஒரு கோப்பையை கூட வென்றுக்கொடுக்காத விராட் கோலி இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் இந்த உலகக்கோப்பையில் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு வெளியேறலாம் என்ற கட்டாயம் இருந்தது.

ஆனால் அதற்கும் தற்போது பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி திணறியதற்கு கேப்டன் விராட் கோலி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பேட்டிங் வரிசையில் மாற்றம், பவுலிங் தேர்வுகள் என கோலி மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 2 நாட்களில் பிசிசிஐ-ன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து முடிவெடுக்கவுள்ளனர்.

இந்திய அணிக்கு இந்தாண்டு எந்தவித ஒருநாள் போட்டி தொடர்களும் இல்லை. அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் வரையிலான ஒருநாள் போட்டி தொடர்கள் எதுவும் அறிவிக்கவில்லை. இதனால் இடையில் டி20 தொடர்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளியை பயன்படுத்தி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Leave A Reply

Your email address will not be published.