மன்னாரில் பாரிய நீர்த்தாங்கி குண்டு வைத்து தகர்ப்பு!

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர் தாங்கி இன்று திங்கட்கிழமை(15) காலை 10.30 மணியளவில் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நீர் விநியோகத்திற்கென துறைமுகங்கள் அதிகார சபையினால் குறித்த நீர்த்தாங்கி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அமைக்கப்பட்ட பாரிய நீர் தாங்கியில் இருந்து எந்த ஒரு நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளது.

மேலும் குறித்த நீர்த்தாங்கியை சூழ்ந்து மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

எனினும் மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட குறித்த நீர்த்தாங்கியை அகற்ற அப்பிரதேச மக்கள் அதிகாரிகளின் உதவியை நாடினர்.

குறிப்பாக குறித்த நீர்த்தாங்கியில் பாரிய வெடிப்புகள் காணப்பட்டு உடைந்து விழுந்து கொண்டு காணப்பட்டது.

குறித்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அச்சுறுத்தலாக காணப்படும் நீர்த்தாங்கியை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவினர் இராணுவத்திடம் உதவி கோரிய நிலையில் மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் உதவியுடன் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தை ஏற்படுத்தும் நீர்த்தாங்கியை குண்டு வைத்து தகர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த பகுதிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல்,மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன்,அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் குறித்த பகுதிக்கு வந்ததுடன் உடனடியாக அப்பகுதி மக்களை பாதுகாப்பிற்காக வெளியேற்றினர்.

பின்னர் இராணுவம் மற்றும் பொலிஸார் குறித்த பகுதிக்கு வருகை தந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், மக்களுக்கு, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் குறித்த நீர்த்தாங்கியை குண்டு வைத்து தகர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு அமைவாக இராணுவத்தின் பொறியியல் பிரிவின் உதவியுடன் குறித்த நீர்த்தாங்கி குண்டு வைத்து தகர்த்தப்பட்டது.

குறித்த நீர்த் தாங்கியில் இருந்து அரிய வகை கூகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வகை ஆந்தை இனம் மிக அரிய வகை என்பதுடன் நீண்ட நாட்களாக குறித்த நீர் தாங்கியில் வசித்து வந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த நீர்த்தாங்கி தகர்க்கப்பட்ட போது குறித்த ஆந்தை காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.