மேற்கிந்தியதீவுகள் அணியை வீத்தியது இலங்கை.

இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிரது. இதில் நவம்பர் 21ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலியில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 386 ரன்களைச் சேர்த்தது. இதில் இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே 147 ரன்களைச் சேர்த்தார். விண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதனால் அந்த அணி 230 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 156 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

அதன்பின் 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்களுக்குள்ளாகவே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த பொனர் – ஜோஷுவா டா சில்வா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 68 ரன்களில் பொனர் ஆட்டமிழக்க, 54 ரன்களில் சில்வாவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
இதனால் அந்த அணி 160 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.