வாகன விபத்தில் மெல்போர்ன் தமிழ் குடும்பஸ்தர் பலி!

விக்டோரியா மாநிலத்தின் வடக்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மெல்பனிலிருந்து 142 கிலோ மீற்றர் தொலைவில் – Bendigo பிராந்தியத்தில் அமைந்துள்ள – Toolleen என்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனமொன்று படகினை கட்டியிழுத்துக்கொண்டு வடக்கு நெடுஞ்சாலையில் Echuca பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, வீடோன்றிலிருந்து வெளியே வந்த செடான் ரக காரோடு மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக Echuca Highway Patrol Sergeant Paul Nicoll தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் செடான் ரக காரின் ஓட்டுநரான மாணிக்கம் இரட்ணவடிவேல் (வயது 68) அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் மெல்பன் Alfred வைத்தியசாலைக்கு ஹெலிக்கொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். இவர்கள் மெல்பனின் Macleod பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

மற்றைய வாகனத்திலிருந்த பயணியொருவர் சிறிய காயங்களுடன் Bendigo வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்துக்கு வேகம் காரணமல்ல என்றும் செடான் காரினை ஓட்டியவர் நெடுஞ்சாலையில் வலது பக்கம் திரும்பும்போது, மற்றைய வாகனத்துக்கு இடம்கொடுக்காததே காரணம் என்றும் சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட Sergeant Paul Nicoll கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.