மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான முதல் தமிழ்வழி தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது..

சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான 9வது தொழிற்பயிற்சி நிலையமாக கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனையில் ஆரம்பிக்கப்பட்ட இத் தொழிற்பயிற்சி நிலையம் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுதர்ஷினி தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

வாழைச்சேனையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த தொழிற்பயிற்சி நிலையம், தமிழ் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்காக சமூக சேவைகள் திணைக்களத்தினால் நிறுவப்பட்ட முதலாவது தொழிற்பயிற்சி நிலையமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதன் ஆரம்பகட்ட வேலைகள் 2017ஆம் ஆண்டு முன்னாள் சமூக சேவைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் சமூக சேவைகள் பணிப்பாளர் பிரதீப் யசரத்னவினால் ஆதரவளிக்கப்பட்டது.

141 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் பாடநெறிகளை நடாத்துவதற்கான வகுப்பறை அமைப்பு என்பன முழுமையாக வசதிகளுடன் உள்ளன. தையல் பாடப்பிரிவின் ஆரம்ப கட்டம் மற்றும் இலத்திரனியல் பாடப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 40 மாணவர்கள் பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தேவையான உபகரணங்கள் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு குறைபாடுகள் உள்ள 16-35 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இங்கு படிப்புகளை பெற்றுக் கொள்ளமுடியும் மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து, உணவு, மருத்துவ வசதிகள் மற்றும் தினசரி வருகைப் படி மற்றும் கற்றல் சான்றிதழுடன் இறுதியில் கருவிகள் வழங்கப்படும்.

“ஊனமுற்றோர் எங்கிருந்தாலும், வளர்ச்சிக்கான பாதுகாப்பை முழுமையாக ஒரு குடிமகனாக வழங்க முடியாது” என்று ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோயியல் மற்றும் தொற்றுநோயியல் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். மேலும் கூறுகையில் “இலங்கையின் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரே மாதிரியாக மாற்றுத்திறனாளி தொழிற்பயிற்சி நிலையங்களை அரசாங்கம் திறக்கிறது. தொழிற்பயிற்சித் திட்டங்கள் மிகவும் முக்கியமானவை எனவும் குறிப்பிட்ட தொழிலுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஓரளவு பொருளாதார வலுவூட்டல்களுடன் கௌரவமான குடிமக்களாக வாழ முடியும்” எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றாநோய் மற்றும் தொற்றுநோயியல் அமைச்சின் செயலாளர் சுனேத்ரா குணவர்தன, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரன், வாழைச்சேனை பிரதேச சபையின் தலைவர் சோபா ஜனரஞ்சனி, சமூக சேவைகள் பணிப்பாளர் சந்தன ரணவீரராச்சி, பணிப்பாளர் உட்பட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.