கொரோனா தடுப்பூசி பாதுகாப்பிலிருந்து ஒமைக்ரான் தப்பும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசியினாலும், கொரோனா தொற்று பாதிப்பினாலும் வருகிற நோய் எதிர்ப்புச்சக்தியினால் கிடைக்கிற பாதுகாப்பில் இருந்து ஒமைக்ரான் வைரஸ் தப்பிவிடும் என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘நேச்சர்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் ஒமைக்ரான் வைரசை கொல்வதற்கு, தடுப்பூசியினால் ஏற்படுகிற நோய் எதிர்ப்பு பொருள் திறனை சோதித்துள்ளனர்.

இந்த சோதனையில் மாடர்னா, பைசர், அஸ்ட்ரா ஜெனேகா, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள், கொரோனா வைரசுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் வைரசை கொல்வதில் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு பொருளுமே, ஒமைக்ரானை கொல்வதில் குறைந்த செயல்திறனையே கொண்டுள்ளனவாம்.

எனவே இந்த தடுப்பூசி எதிர்ப்பு சக்தியில் இருந்து ஒமைக்ரான் தப்பி விடும் வாய்ப்பு உள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து மோனோகுளோனல் ஆன்டிபாடி சிகிச்சைகள் மற்றும் உருவாக்கப்படுகிற ஆன்டிபாடி சிகிச்சைகள் பெரும்பாலானவை ஒமைக்ரானுக்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டவை என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனால் ஒமைக்ரான் பரவல் தொடர்கிறபோது, அதை முடிவுக்கு கொண்டு வர புதிய தடுப்பூசி தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.