மன அழுத்தம்: 2வது மாடியில் இருந்து குதித்து காவலர் தற்கொலை!

புதுச்சேரியில் மன அழுத்தம் காரணமாக காவலர் பயிற்சி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ளது காவலர் பயிற்சி பள்ளி. இங்கு ஆள் சேர்ப்பு பிரிவில் காவலராக பணி புரிந்து வந்தவர் மகேஷ் (36). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதற்காக கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் விரைவில் புதுச்சேரியில் காலியாக உள்ள காவலர்களுக்கான பணியிடங்களை ஆட்சேர்ப்பு முலம் நிரப்பும் பணி நடைபெற உள்ளதால் இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதனால் காவலர் மகேஷ் சமீபகாலமாக மிகவும் மன உளைச்சலாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை காவலர் பயிற்சி பள்ளிக்கு பணிக்கு வந்த மகேஷ் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

இதனை கண்ட காவலர்கள் அவரது உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தன்வந்திரி நகர் போலீசார் காவலர் மகேஷ் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட காவலர் மகேஷ்க்கு மனைவி மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் ஸ்ரீ ஹரி என்ற மகனும் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.