தமிழக அரசின் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4% மட்டுமே மருத்துவமனை படுக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் சிகிச்சையில் இருப்பவர்கள் 7%, தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை 7% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். டெல்டா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு 350 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

தமிழகத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் 70% அளவிற்கு இறப்பை நோக்கி செல்கிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் இது மாதிரியான பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ளலாம். 1.10 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும். வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. நாளை (வியாழக்கிழமை) பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும். 7.59 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 1.5 லட்சம் பேர் நாளை நடைபெறும் முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இளம் சிறார்களுக்கு 80.4 % பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9.71 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம் என அமைச்சர் கூறினார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குருதிசார் ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆய்வில் 32%, இரண்டாவது ஆய்வில் 29%, மூன்றாவது ஆய்வில் 70%, நேற்று வெளியான 4-ம் கட்ட ஆய்வில் 87% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவிதமாக உள்ளது என இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 69% உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்சமாக திருவாரூரில் 93%, தென்காசி 92% உள்ளது என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைவாக உள்ளதே காரணம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழக அரசின் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பு அனுப்ப வாய்ப்பில்லை என்றும், நீட் தேர்வு தமிழகத்திற்கு அவசியமில்லை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த அண்ணாமலை, மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கல்வி திறன் அதிமாக உள்ளது அதனால் நீட் தேர்வை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்த அவர், நீட் தேர்விற்கு பாஜக போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள் என தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.