“இப்போதும் திருடா திருடிதான் என்னோட அடையாளம்” – நடிகை சாயா சிங் பேட்டி.

தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான நடிகை சாயா சிங், அறிமுக படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.

அதன் பிறகு, பல்வேறு படங்களில் அவர் நடித்து வந்தார். இந்த நிலையில், கலர்ஸ் தமிழில் வரும் 21ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள ’நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ என்ற சீரியலில் மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் இருந்த சாயா சிங்கை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு…

கலர்ஸ் டீவியில் இருந்து தொடர்பு கொண்டு ’நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ என்று ஒரு சீரியல் பண்றோம் என்றார்கள். சீரியல் கான்சப்ட் எனக்கு பிடித்திருந்ததால் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன். இந்த சீரியலில் மூத்த அக்காவாக நடித்துள்ளேன். அம்மா, அப்பா இல்லாத வீடுகளில் மூத்த அக்காவிற்குத்தான் அதிக பொறுப்பு, அக்கறை இருக்கும்.

அவை எல்லாம் நிறைந்த கதாபாத்திரமாக என்னுடைய இந்திராணி கதாபாத்திரம் இருக்கும். அக்கா தங்கைகளுக்கு இடையேயான உறவை அழகாக இந்த சீரியலில் சொல்லியுள்ளோம். நான் ரொம்பவும் மென்மையான ஆள். யாரையும் எதிர்த்து பேசமாட்டேன், சரிசரி என்று கேட்டுக்கொள்வேன். ஆனால், இந்த சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் அப்படியே நேர் எதிரானது. அதை ஏற்று நடிப்பது கொஞ்சம் சேலஞ்சிங்காக இருந்தது.

சீரியலின் ப்ரோமோவுக்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வரவேற்பைப் பார்க்கும்போது மக்கள் மத்தியில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ்க்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பது தெரிகிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் எங்கு சென்றாலும் இப்போதும் திருடா திருடி கதாபாத்திரம், மன்மத ராசா பாடலை வைத்துதான் மக்கள் என்னை அடையாளம் காண்கிறார்கள். மேடம் கொஞ்சம் ஷூ கழட்டுங்க… உங்க விரலை பார்த்துக்குறோம் என்றுதான் கேட்கிறார்கள். முதல் படத்திலேயே எனக்கு இவ்வளவு பெரிய ரீச் கிடைத்தது என்பதை நினைக்கும்போது சந்தோசமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.