பிரேசில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு..!

தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த செவ்வாய் கிழமை இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாகாணத்தில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ள நீரானது, ஊருக்குள் புகுந்ததில், மண்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் மூழ்கி போயின. குறிப்பாக இந்த கனமழையால் அங்குள்ள மலைபிரதேசமான பெட்ரோபோலிஸ் பிராந்தியம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. தொடர் கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் இருந்து 24 பேரை காப்பாற்றி உள்ளதாகவும், 439க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பிரேசிலில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்து உள்ளது. 213க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிளில் மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.