நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற இருவர் மர்மமான முறையில் மரணம்.

குருணாகல் மாவட்டம் கொகரெல்ல பகுதியில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணம் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த கணவன், மனைவி, தங்கியிருந்த ஹொட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினருடன் நுவரெலியா சென்றிருந்த இந்த தம்பதி உள்ளிட்டோர் நள்ளிரவு வரை பாபிகியூ அடுப்பில் இறைச்சியை சுட்டு சாப்பிட்டுள்ளனர்.

இதன் பின்னர் கணவனும் மனைவியும் கடும் குளிர் காரணமாக பாபிகியூ அடுப்பை அறைக்கு எடுத்துச் சென்று உறங்கியுள்ளனர். 58 மற்றும் 59 வயதான இந்த தம்பதி மறுநாள் காலையில் எழுந்திருக்காத காரணத்தினால், குடும்பத்தினர் அவர்கள் தங்கி இருந்த அறையை திறந்துள்ளனர்.

அப்போது இரண்டு பேரும் இறந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்திய நுவரெலியா நீதவான்,

உடல்களை பிரேதப் பரிசோதனைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.