எந்தெந்த நாடுகளிடம் ஆயுதங்கள் உள்ளன?

உலகில் தற்போது ஒன்பது நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.

இந்த நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா.

அவர்களிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை என்ன?

அணு ஆயுதங்களைப் பற்றி எந்த நாடும் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அணு ஆயுத நாடுகளின் ராணுவத்திடம் 9,000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஸ்வீடனை தளமாகக் கொண்ட ‘ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ (SIPRI) என்ற சிந்தனைக் குழு கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஒன்பது நாடுகளிடம் சுமார் 13,400 அணு ஆயுதங்கள் இருந்தன என்றும் அவற்றில் 3,720 ஆயுதங்கள் படைகளுடன் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கிறது.

இந்த ஆயுதங்களில் சுமார் 1,800 அதிக உஷார் நிலையில் உள்ளன. அதாவது, அவற்றை குறுகிய நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று SIPRI கூறுகிறது.

இந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன. 2020ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவிடம் 5,800 அணு ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 6,375 அணு ஆயுதங்களும் இருக்கும் என்று அது மேலும் தெரிவிக்கிறது.

இந்தியாவிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?
அணு ஆயுதங்களைப் பொருத்தவரை இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை விடக் கூடுதலாக வைத்திருக்கின்றன என்று SIPRI அறிக்கை தெரிவிக்கிறது.

2021ல் இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்களும், சீனாவிடம் 320 அணு ஆயுதங்களும் இருந்தன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஒன்பது நாடுகளிடம் மட்டும் ஏன் அணு ஆயுதங்கள் உள்ளன?
அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த 1970ஆம் ஆண்டில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அதாவது NPT எனப்படும் ஒரு ஒப்பந்தம், 190 நாடுகளுக்கு இடையே அமலுக்கு வந்தது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவும் இதில் அடங்கும். ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை. 2003ல் வடகொரியா அதிலிருந்து விலகியது.

ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டான 1967க்கு முன்பாக அணு ஆயுதங்களை சோதனை செய்த ஐந்து நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தின் கீழ், அணு ஆயுத நாடுகளாக கருதப்பட்டன.

இந்த நாடுகள் – அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா.

இந்த நாடுகள் தங்கள் ஆயுத சேகரிப்பை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது அதாவது, அவற்றைக் குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.

கூடவே இந்த நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் அணு ஆயுதம் தயாரிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தங்கள் ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைத்தன.

ஆனால் பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் ஆயுதங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய அதே போல இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இந்தியா, பாகிஸ்தான், சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.