இஸ்ரேலின் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் 2 பேர் பலி..! – ‘பழிதீர்ப்போம்’ என ஈரான் சூளுரை.

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி சிரியா தலைநகர் டமாஸ்கசில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் தங்கள் நாட்டின் ராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் தற்போது தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிரியா தலைநகர் டமாஸ்கசில் பணியில் இருந்த ஈரான் புரட்சிகர காவல்படையின் அதிகாரிகளான எஹ்சான் கர்பலைபூர் மற்றும் மோர்டேசா சயீத்நவ்ஜாத் ஆகிய இருவரும் இஸ்ரேல் ராணுவத்தின் ஏவுகணை வீச்சில் கொல்லப்பட்டனர். இந்த குற்றத்துக்கு இஸ்ரேல் பெரிய விலை கொடுத்தாக வேண்டும். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலை ஈரான் நிச்சயம் பழிதீர்க்கும்” என கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.