பனை ஓலை பெட்டி பிரியாணி.. அசத்தும் தூத்துக்குடி இளைஞர்- சுவாரஸ்ய பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நெகிழிக்கு மற்றும் பிளாஸ்டிக் டாப்பாவிற்கு பதிலாக பனை ஓலை பெட்டியில் பிரியாணி மற்றும் பாஸ்புட் உணவு வகைகளை கொடுத்து வருகிறார் பாஸ்புட் கடை நடத்தும் மகேந்திரன் என்ற இளைஞர். இயற்கை மணத்துடன் கிடைக்கும் பிரியாணி மற்றும் உணவு பொருள்களை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

பாலித்தீன் (நெகிழி) பொருள்களினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படடு வருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு நெகிழி ஒழிப்பினை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெகிழிக்கு பதில் மஞ்சள் பைகளை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று அரசு சார்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அரசு மட்டும் செய்தால் போதாது ஒவ்வொரு மனிதரும் அதனை முன்னெடுக்க வேண்டும் என்பதனை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் நெகிழி ஒழிப்பினை தனது துரித உணவகத்தில் இருந்து தொடங்கியுள்ளார் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தினை சேர்ந்த மகேந்திரன் என்ற இளைஞர்.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்-ல்” கடந்த 2000-ம் ஆண்டில் கல்வி முடித்து பின்னர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்துவிட்டு, தற்பொழுது தனது சொந்த ஊரில் துரித உணவகம் (பாஸ்புட்) நடத்தி வருகிறார். விளாத்திகுளம் பகுதியில் பனை ஓலை பெட்டி செய்யும் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளதால், அவர்கள் பயன்படும் வகையிலும், அரசின் விழிப்புணர்வுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் மகேந்திரன், நெகிழி பொருள்களை தவிர்த்து பனை ஓலை பெட்டியில் உணவு பொருள்களை கொடுக்க முடிவு செய்தார்.

பனை ஓலை பிரியாணி
அதன்படி பாலீத்தீன்(நெகிழி) பைக்குகளுக்கு மாற்றாக சற்று வித்தியாசமான முறையில் புதிய முயற்சியாக “பனை ஓலைப் பெட்டிகளில்” பிரியாணிகளை வழங்கி வருகிறார். 1 நபர் சாப்பிடும் அளவிற்கான பிரியாணியை சிறிய பனையோலைப் பெட்டியில் ரூ.100க்கும், 2-லிருந்து 3 நபர்கள் சாப்பிடும் அளவிற்கான பிரியாணியை பெரிய பனையோலைப் பெட்டியில் ரூ.180க்கும் விற்பனை செய்து வருகிறார். இப்பகுதியில் சற்று வித்தியாசமான முறையில், பனையோலைப் பெட்டிகளில் சிக்கன், மட்டன் பிரியாணியை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்வதால், இந்த “பனையோலை பெட்டி பிரியாணி கடையானது”, இப்பகுதியில் உள்ள பிரியாணி பிரியர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உள்ளுர் வாசிகள் மட்டுமின்றி விளாத்திகுளம் அருகில் ஈசிஆர் சாலை இருப்பதால் இப்பகுதி வழியாக செல்லும் வெளியூர் நபர்கள், சுற்றுலா செல்பவர்களும் ஆர்வமுடன் ஓலை பெட்டி பிரியாணியை வாங்கி செல்கின்றனர். பிரியாணி மட்டுமின்றி பாஸ்புட் உணவு வகைகளையும் ஓலை பெட்டியில் வழங்கி வருகிறார்.

உணவக உரிமையாளர் மகேந்திரன்
இதுகுறித்து துரித உணவக உரிமையாளர் மகேந்திரன் கூறும் போது, மண் வாசனையுடன் இயற்கை மணத்துடன் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஓலை பெட்டியில் பிரியாணி வழங்கி வருவதாக கூறினார். பிரியாணி வழங்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் டப்பா மற்றும் ஓலைப்பெட்டியின் விலை இரண்டும் ஒன்றாக இருப்பதால், அப்புறம் ஏன் பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டும், நெகிழி ஒழிப்பிற்கு நாமும் ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓலைப்பெட்டியில் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும், நெகிழியில் உணவு பொருள்கள் கொடுப்பதால் உடலுக்கு கேடு ஏற்படும் என்பதால் மக்களுக்கு ஓலைப்பெட்டியில் பிரியாணி மற்ற உணவு வகைகளை வழங்கி வருவதாக கூறுகிறார்.விழிப்புணர்வு என்பது மற்றவர்களுக்கு நாம் செல்வதை விட அதனை நாம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அது எளிதில் மக்களை சென்றுடைந்து விடும் என்பதால் மகேந்திரனின் முயற்சி வரவேற்பது மட்டுமின்றி பாராட்டுக்குரியது.

Leave A Reply

Your email address will not be published.