பதவி விலகுவதைத் தவிர மஹிந்தவுக்கு வேறு வழியில்லை! – டலஸ் சாட்டையடி.

“பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.”

இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவுமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பார் என்றும், இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் தனது தலைமையிலேயே மலரும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அரசியல் மற்றும் கட்சி வரலாறு தெரியாத ஒரு சிலரே தன்னைப் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கூறி வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கருத்துத் தெரிவிக்கும்போது,

“பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளால் நாடு பேரவலத்தைச் சந்தித்துள்ளது. எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், அவர் தலைமையிலான அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலகி அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. எனவே, பழுத்த அரசியல்வாதியான அவர் எமது கோரிக்கையை ஏற்பார் என்று இன்னமும் நம்புகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.