அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை!

அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்குப் பொலிஸாரால் நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தனக்கு எதிரான நீதிமன்றத் தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் எம்.பி. தெரிவிக்கையில்,

“14 நாட்களுக்கு வீதியை மறித்தோ பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு விடயமும் செய்யக் கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

இதுதான் நாட்டின் இன்றைய அராஜகமான நிலை. ஏன் என்றால் இன்று இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலுமே மக்கள் வீதியிலேயே போராடும்போது, இன்று களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மாத்திரம் ஒரு நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றிருக்கின்றார்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு இன்னுமொரு சட்டமா? என்பதுதான் நீண்டகாலமாக எங்களுக்கு இருக்கின்ற கேள்வி.

களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அதனை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கின்றார்.

இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறாத இடங்கள் இல்லை. அவ்வாறிருக்கையில், களவாஞ்சிக்குடியில் மாத்திரம் இவ்வாறு தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான விடயங்கள் ஊடாக மக்களைக் கட்டுப்படுத்த அரசு முனையும்போது, மக்கள் இதனையும் விட உத்வேகமாகப் போராட முனைவார்கள்.

நான் இன்று வரை போராட்டங்களைச் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால், இந்தத் தடை உத்தரவு கிடைத்ததற்குப் பின்னர் போராட்டம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.