யாழில் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்பால் குழப்பங்கள் அறிவித்தல்களும் கிழித்தெறியப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலங்களின் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காகப் மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்த வேளை, நல்லூர் பிரதேச செயலர், தமது பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்க வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்குப் பணித்திருந்தார். அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

நல்லூர் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு நேற்று திருநெல்வேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையிலும், இன்றைய தினமும் கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு ஒதுக்கியமையால் குழப்பங்கள் ஏற்பட்டன.

அதேவேளை, கோப்பாய் பிரதேச செயலகத்தினரால் கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவித்தல் ஒட்டியமையால் குழப்பங்கள் ஏற்பட்டன.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த வேளை, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்குத் தான் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவித்தல் ஒட்டப்பட்டமையால் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல்களையும் மக்கள் கிழித்தெறிந்தனர்.

அதேவேளை, நேற்றைய தினமே ஊர்காவற்துறை மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலகங்களால் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அறிவிக்கப்பட்டமையால், அவ்விரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் குழப்பங்கள் இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களே குழப்பங்கள் ஏற்படக் காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.