கரும்புலிகள் நாளில் வெடிகுண்டு மிரட்டலா?

ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு அல்லது தென்னிலங்கையில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரித்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பொலிஸ்மா அதிபர் அனுப்பிய கடிதம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று கேள்வி எழுப்பினார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-

“அந்தக் கடிதத்தின் பிரகாரம் சர்வதேச உளவு நிறுவனங்களின் பங்களிப்புடன் மேற்படி இரண்டு தினங்களில் நடைபெறவுள்ள கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வுகளை இலக்கு வைத்து இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் எந்தவொரு நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டாம் என வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இந்தக் கடிதம் எச்சரித்துள்ளது.

இந்தத் தகவல்கள் பொலிஸ்மா அதிபரால் எப்படி, எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், அப்படித் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதையும் அரசு வெளிப்படுத்த வேண்டும்.

தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களையும் உணர்வுகளையும் நசுக்கவே இவ்வாறான செய்திகள் பகிரப்படுகின்றன என்ற சந்தேகம் எம்மிடம் எழுந்துள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.