தொலைக்காட்சி தொடரால் விபரீதம்: 7 வயது சிறுவன் கடத்தி கொலை.. 5 சிறுவர்கள் கைது!

பிரபல கிரைம் தொடரை பார்த்து அதன் மூலம் ஈர்க்கப்பட்டு, சிறுவர்கள் சிலர் 7 வயது பள்ளி மாணவரை கடத்தி கொலை செய்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை புலந்த்ஷார் காவல்துறை கைது செய்துள்ளது.இவர்கள் அனைவரும் 15,16 வயது சிறார்கள் ஆவர்.

இந்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச காவல்துறை கூறியதாவது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது பணம் ரூ.40,000ஐ தவறவிட்டுள்ளார். தான் இழந்த தொகையை எப்படியாவது திரும்பப் பெற வேண்டும் என சிறுவன் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். நண்பர்கள் பிரபல டிவி கிரைம் தொடரை உதாரணம் காட்டி அதுபோல ஆள் கடத்தலில் ஈடுபட்டு பணம் பெறலாம் என யோசனை தந்துள்ளனர். எனவே, பள்ளி குழந்தை ஒன்றை கடத்தி அதன் மூலம் மிரட்டி பணம் பறிக்கலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். இந்த விபரீத யோசனையின் பேரில் ஜூலை 9ஆம் தேதி அன்று அந்த சிறுவன் தான் படிக்கும் பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுவனை நண்பர்களுடன் சேர்ந்து கடத்தியுள்ளார்.

இந்த சிறுவனை கடத்தி அலிகர் என்ற பகுதிக்கு வண்டியில் கூட்டிச் சென்று அடைத்து வைத்துள்ளனர். ஒரு வேகத்தில் கடத்தலில் ஈடுபட்ட சிறுவர்கள் தங்கள் திட்டம் தோல்வியில் அடைந்தால் என்ன செய்வது என பதற்றம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிறுவனை கொலை செய்து விஷயத்தை மூடி மறைத்து விடலாம் என முடிவெடுத்து, அந்த 7 சிறுவனை கொலைசெய்து அலிகரில் உள்ள ஆற்றில் வீசியுள்ளனர்.

இதற்கிடையே சிறுவனின் தந்தை காவல்துறையில் தனது மகனை காணவில்லை என புகார் தந்துள்ளார். சில நாள்களுக்கு பின்னர் சிறுவனின் உடல் அலிகர் பகுதியில் உள்ள நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்டெடுத்த காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்து 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், 200க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது சிறார் குற்றப் பிரிவில் நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறை சிறார் சிறையில் அடைத்துள்ளது. டிவி தொடரை பார்த்து 7 வயது சிறுவனை கடத்தி சிறுவர்கள் கொலை செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.