ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி.

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பாசாவுக்கு நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று பயணம் மேற்கொண்டது.

மெரு-நைரோபி நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுபாலம் மீது அந்த பேருந்து சென்று போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கீழ் ஓடும் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மெரு மாவட்ட ஆணையர் நோர்பர்ட் கொமோரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.