ராஜபக்சக்களின் மீளெழுச்சி விரைவில் நடக்கும்! – கோட்டாவின் வருகையோடு மஹிந்த எக்காளம்.

“ராஜபக்சக்களைக் கீழ்த்தரமாக விமர்சிக்கவேண்டாம். ராஜபக்சக்களின் எழுச்சி விரைவில் நடக்கும். உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சிகளால் ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு ஒருபோதும் முடிவு கட்ட முடியாது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பியுள்ளமை ராஜபக்சக்களின் மீளெழுச்சிக்கு வழிவகுக்கும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே அவரின் சகோதரரான மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்சக்கள் தோற்கவும் இல்லை,தோற்கடிக்கப்படவும் இல்லை. சுயமாகப் பதவிகளிலிருந்து விலகிய அவர்கள் விரைவில் மீளெழுச்சி பெறுவார்கள்.

எதிரணியினர் ராஜபக்சக்களைக் கண்டபடி வசைபாடுகின்றனர்; குறைத்து மதிப்பிடுகின்றனர். ராஜபக்சக்களின் அருமையும், திறமையும், எமக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு நன்றாகப் புரியும்.

உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சிகளால் ராஜபக்சக்களின் அரசியலுக்கு முடிவுகட்ட முடியாது.

தேர்தல் ஒன்று நடந்தால் அதில் ராஜபக்சக்களினதும் ‘மொட்டு’க் கட்சியினரினதும் கைகள் மீண்டும் ஓங்கும். அந்தத் தேர்தலில் எதிரணியினர் வழமை போன்று தோல்வியையே தழுவுவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதை நான் வரவேற்கின்றேன். தனது மீள் அரசியல் பிரவேசம் தொடர்பில் அவர் சிறந்த முடிவை எடுப்பார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.