கோட்டா தப்பியோடவும் இல்லை; விரட்டியடிக்கப்படவும் இல்லை! – அவர் நாடு திரும்பியமை தொடர்பில் பஸில் விசித்திரமான கருத்து.

“கோட்டாபய ராஜபக்ச, நாட்டைவிட்டுத் தப்பியோடவும் இல்லை. அவர் விரட்டியடிக்கப்படவும் இல்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

மக்களின் மாபெரும் எதிர்ப்புப் போராட்டங்களையடுத்து இலங்கையைவிட்டுத் தப்பியோடி ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்த நிலையில் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடி அலைந்து திரிந்த கோட்டாபய ராஜபக்‌ச மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இந்நிலையிலேயே அவரின் சகோதரனான பஸில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் சில தரப்புக்களின் சதி முயற்சியால் திடீரென எழுந்த கொந்தளிப்பு நிலைக்குத் தீர்வுகாணவே கோட்டாபய ராஜபக்ச சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியிருந்தார்.

நாட்டில் தற்போது அமைதி நிலவுவதால், அவர் மீண்டும் இங்கு வந்துள்ளார்.

அவர் இலங்கைப் பிரஜை. ஒரு முன்னாள் ஜனாதிபதி. இந்நிலையில், அவர் வெளிநாடுகளில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

நாடு திரும்பியுள்ள அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளை அரசு வழங்குகின்றது.

அவர் விரும்பினால் மீண்டும் ‘மொட்டு’க் கட்சி ஊடாக அரசியலுக்குள் நுழையலாம். இது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.