வடமராட்சியில் இரு கிராமங்கள் இடையே தொடர் மோதலால் பதற்றம்!

யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை – துன்னாலை மேற்குப் பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாள்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்தத் தகவலை நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்கள், கற்கள் மற்றும் போத்தல்களினால் மோதல்கள் இடம்பெறுகின்றன என்று பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் 7 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

“நான்கு நாள்களுக்கு முன்னர் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாற்றமடைந்தது. அது பின்னர் கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. சம்பவத்தில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. சிலர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும், மோதல்கள் தொடர்கின்றன.

இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெயர் குறிப்பிடப்பட்ட 25 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

நேற்று நண்பகல் 12.30 தொடக்கம் மாலை 6.30 மணிவரை அடங்கியிருந்த மோதல் மீண்டும் நேற்று இரவு முதல் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” – என்று நெல்லியடிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.