கோரிக்கை நிறைவேறியதால் 21 ஆண்டுகள் கழித்து தாடியை எடுத்த நபர்… அப்படி என்ன கோரிக்கை?

சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் வசிக்கும் பகுதியை மாநிலத்தின் 32வது மாவட்டமாக மாற்றி அறிவிக்கும் வரை தாடியைச் சவரம் செய்யமாட்டேன் என்று வினோதமான குறிக்கோளுடன் 21 வருடங்களாகத் தாடியை வளர்த்து வந்த நபர் தற்போது தாடியை எடுத்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மனேந்திரகர் பகுதியில் வசிக்கும் ராம சங்கர் குப்தா என்ற ஆர்டிஐ ஆர்வலர், மனேந்திரகர் – சிர்மிரி – பாரத்பூர் பகுதியை இணைத்து சத்தீஸ்கரின் 32வது மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 21 ஆண்டுகளாக கோரிக்கையை வைத்து வருகிறார். அந்த பகுதி மாவட்டமாக மாறும் வரை தான் தாடியைச் சவரம் செய்யப்போவது இல்லை என்றும் சபதம் எடுத்தார்.

தனது சபதத்தை இத்தனை வருடங்களாகக் கடைப்பிடித்தும் வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது சத்தீஸ்கர் அரசு அந்த பகுதியை மாநிலத்தின் 32வது மாநிலமாக அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மனேந்திரகர் – சிர்மிரி – பாரத்பூர் பகுதியை அதிகாரப்பூர்வமாக மாவட்டமாக அறிவித்தார்.

இதனைதொடர்த்து ராம சங்கர் குப்தா தாடியைச் சவரம் செய்துள்ளார். ஒரு வருடம் முன்பே இந்த பகுதியை மாவட்டமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனால் அப்போதே 21 வருடமாக வளர்த்த தாடியைச் சவரம் செய்தார். ஆனால் மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக துவக்கப்படாத நிலையில் மீண்டும் ஒரு வருடமாகத் தாடியை வளர்த்துள்ளார்.

தற்போது முழுமையாகச் சவரம் செய்து கொண்ட அவர் இந்த நிகழ்வைப் பற்றித் தெரிவிக்கையில், மனேந்திரகர் – சிர்மிரி – பாரத்பூர் பகுதி மாவட்டமாக அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும் தாடியைச் சவரம் செய்யாமல் கொள்கையுடன் இருந்திருப்பேன். இது 40 வருட போராட்டம். இந்த பகுதியை மாவட்டமாக மாற்றப் போராடியவர்கள் தற்போது இல்லை என்றும் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்வதாகத் தெரிவித்தார்.

மேலும் மனேந்திரகர் – சிர்மிரி – பாரத்பூர் பகுதியை மாவட்டமாக அறிவித்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்-க்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த புதிய மாவட்டம் சத்தீஸ்கரில் மட்டுமின்றி நாட்டிற்கே முதன்மையான மாவட்டமாக மாறவேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.