வீதி புனரமைக்கும் நிறுவன தொழிலாளர் மீது தாக்குதல்.

வவுனியா நெடுங்கேணி ஒலுமடு பகுதியிலுள்ள வீதி புனரமைக்கும் நிறுவன தொழிலாளர் மீது நேற்று (செவ்வாய்கிழமை) இரவு நெடுங்கேணியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் ,
நேற்று இரவு 6.45 மணியளவில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வாகனம் வழிமறிக்கப்பட்டு ஒரு வழிப்பயணம் மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டபோது முச்சக்கரவண்டி செலுத்தி வந்த சாரதி ஒருவர் குறித்த ஊழியரின் கருத்தை உள்வாங்காமல் தனது முச்சக்கரவண்டியை செலுத்தியபோது இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதேவேளை கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதையடுத்து முச்சக்கரவண்டி சாரதி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நெடுங்கேணி சந்தியிலிருந்த தனது நண்பர்களை அழைத்து குறித்த வீதி திருத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தலையில் காயமடைந்த ஊழியர் நெடுங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் .
இந்நிலையில் நேற்று இரவு மேலதிக சிகிச்சைகளுக்காக காயமடைந்த நெடுங்கேணி பெரியமடு பகுதியைச் சேர்ந்த குகமூர்த்தி துசிந்தன் வயது 34 என்ற குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் .

இச்சம்பவம் குறித்து பணியாளர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதுடன் வவுனியா பொது வைத்தியசாலையிலுள்ள பொலிஸ்  நிலையத்திலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.