7 வயது சிறுமி கொலை: கசிப்பு வியாபாரி கைது!

தனது காதலியின் மகளான ஏழு வயதுச் சிறுமியைப் படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த கசிப்பு வியாபாரியை பொலிஸ் மற்றும் அதிரடிப் படை அதிகாரிகள் கலவான நகரில் கைதுசெய்தனர்.

தனது மனைவி மற்றும் இரண்டு காதலிகளுடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்த சந்தேகநபர் ஒரு வாரத்துக்கு முன் தன் காதலி ஒருவரின் மகளான ஏழு வயது சிறுமியை அடித்துப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்ட சந்தேகநபர் கலவான பிரதேசத்தில் மறைந்திருக்கின்றார் என்று கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடி ப்படை குழுக்களால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது காதலியின் ஏழு வயது மகளை அடித்துப் படுகொலை செய்தார் எனவும், இதற்கு இச்சிறுமியின் தாயான காதலியும் சந்தேகநபரின் இன்னொரு காதலியும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் எனவும், இறந்த சிறுமியை இரத்தினக்கல் தோண்டப்பட்ட குழியில் உறையொன்றில் போட்டு சந்தேகநபர் புதைத்தார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது மகளின் கொலைக்குச் சந்தேகநபரான காதலனுக்கு உதவியாக இருந்த தாய் தனது மகள் காணாமல்போனார் என்று பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ய முயற்சித்தபோது பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் இந்தக் கொலைச் சம்பவம் அம்பலத்துக்கு வந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.