சண்டீகர் பல்கலை ஆகிறதா மும்பை ஐஐடி! மாணவியை விடியோ எடுத்த ஊழியர்

மும்பை ஐஐடி விடுதியில் மாணவி குளிப்பதை அங்கு பணிபுரிந்து வந்த நபர் விடியோ எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், ஐஐடி உணவகத்தில் பணிபுரிந்து வந்த நபரை மும்பை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் சண்டீகர் பல்கலைக் கழக விடுதியில் மாணவிகள் குளிக்கும் விடியோ இணையத்தில் பகிரப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள் மும்பை ஐஐடி விடுதியில் இதேபோன்று மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

மும்பை ஐஐடி விடுதியில் பல்வேறு மாணவிகள் தங்கி பயின்று வரும் நிலையில், விடுதி குளியலறையில் மாணவி குளிப்பதை உணவக ஊழியர் ஒருவர் விடியோ எடுத்துள்ளார்.

இதனைக் கண்ட மாணவி விடுதி நிர்வாகத்திடம் இது தொடர்பாக புகார் எழுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஐஐடி விடுதி நிர்வாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து அவரின் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

இதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மாணவி ஐஐடி விடுதி நிர்வாக அதிகாரிகளுடன் காவல் நிலையம் சென்று இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

காவல் துறையினர் ஐஐடி விடுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முடிவில் மும்பை ஐஐடி உணவக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

விடுதி குளியலறை சன்னல் அருகே இருக்கும் பழுப்பின் மீது ஏறிவந்து உணவக ஊழியர் செல்போன் மூலம் மாணவி குளிப்பதை படமெடுத்துள்ளார். இதனால் குளியலறை சன்னல் அருகே எந்தவித பழுப்புகளும் இல்லாத வகையில் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.