தியாகி திலீபன் நினைவாலயம்: புலன் விசாரணைகள் ஆரம்பம்! பழைய கோப்புக்களைக் கிளறுகின்றது அமைச்சு.

யாழ். நல்லூர் பின்வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு நல்லாட்சி அரசின் காலத்தில் பாதுகாப்பு வேலி, அரச நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டமை தொடர்பில் 4 ஆண்டுகளின் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.

நல்லாட்சி அரசின் காலத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சுக்கு ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் பாதுகாப்பு வேலிக்கான நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு அமைவாக அது அமைக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு நல்லாட்சிக் காலத்தில் பொலிஸார் தடை உத்தரவு பெற்றனர்.

இதன்போது நீதிமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களில், திலீபனின் நினைவுத் தூபி அரச நிதியில் அமைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் பொலிஸாரால் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் மூன்று மாதங்களுக்கு முன்னர் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு மிகக் காட்டமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு அரச நிதியை எவ்வாறு ஒதுக்க முடியும்? என்று அதில் கேள்வி எழுப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சின் புலன் விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.