நாடு வங்குரோத்து நிலை அடைந்தமைக்கு ராஜபக்சக்களே முழுக்காரணம்!

“நாடு வங்குரோத்து நிலை அடைந்தமைக்கு ராஜபக்சக்களே முழுக்காரணம். இதை எவரும் மறுதலிக்க முடியாது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

“ராஜபக்ச யுகம் மீண்டும் ஏற்பட மக்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியும், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியும் வளமிக்க எமது நாட்டைச் சீரழித்துவிட்டது.

ஒட்டுமொத்தத்தில் ராஜபக்ச குடும்பமே எமது நாட்டு வளங்களைச் சுரண்டித் திண்டு விட்டனர்.

ராஜபக்சக்களின் ஆட்சிக்கு ஆணை வழங்கிய மக்கள், தங்கள் குற்ற உணர்வை உணர்ந்து கொதித்தெழுந்தமையால்தான் ராஜபக்சக்களின் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

எனினும், ஏதோவொரு வழியில் மீண்டும் தங்கள் ஆட்டங்களைக் காண்பிக்க ராஜபக்சவினர் முயல்கின்றனர். இதற்கு எவரும் துணைபோகக்கூடாது. அமைச்சரவையில் ராஜபக்சக்கள் எவரும் அங்கம் வகிக்க இடமளிக்கக்கூடாது.

விரைவில் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும். நிலையான அரசு அமைய வெளியிலிருந்து எனது பங்களிப்பை வழங்க நான் தயாராகவுள்ளேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.