வவுனியாவில் இ.போ.ச. பஸ் மோதி வயோதிபர் ஒருவர் மரணம்!

வவுனியாவில் சைக்கிளுடன் இ.போ.ச. பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் இன்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாலை 5.30 இற்கு மன்னார் நோக்கிப் புறப்பட்ட இ.போ.ச. பஸ் பயணிகளை ஏற்றுவதற்காக வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியூடாக குடியிருப்பு நோக்கிச் சென்ற போது, வைத்தியசாலை வீதியில் இருந்து குடியிருப்பு நோக்கித் திரும்பிய சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சைக்கிளில் பயணித்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

வவுனியா, வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா தவராசா (வயது 65) என்பவரே உயிரிழந்தவராவார்.

விபத்தையடுத்து இ.போ.ச. சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.