உயிரிழந்தவர்களை நினைவுகூர எந்தத் தடையும் இல்லை! – புலிகளின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்.

“இலங்கையில் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு முழு உரிமை உண்டு. இதில் அரசியல் தலையீடுகள், பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடுகள் இருக்கவே கூடாது.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

மாவீரர் வாரத்தை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்படுகின்றன. இதன்போது பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகள், மாவீரர் நாளை கடைப்பிடித்தால் சட்ட நடவடிக்கை என்ற பொலிஸாரின் மிரட்டல்கள் தொடர்பில் நீதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கைச் செலுத்துவதை நிறுத்த வேண்டும். மக்கள் தமது உறவுகளைச் சுதந்திரமாக நினைவேந்த அவர்கள் இடமளித்து விலகி நிற்க வேண்டும்.

ஆனால், நாட்டில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி எவரும் நினைவேந்தல்களைப் பகிரங்கமாகச் செய்ய முடியாது.

பாதுகாப்புத் தரப்பினரை ஆத்திரமூட்டும் வகையில் எவரும் நடக்கக்கூடாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.