தற்போதைய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் வேடிக்கையானவை! – எதிர்க்கட்சிகளின் பகற்கனவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என்கின்றார் பொன்சேகா.

தற்போதைய அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சொத்துக் குற்றச்சாட்டுக்கள் வேடிக்கையானவை. பில்லியன் கணக்கில் நாட்டைச் சூறையாடியவர்களுடன் ஒப்பிடுகையில் இவை ஒரு பாரிய மோசடியே அல்ல” என்று முன்னாள் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நிதி மோசடி மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து அவர் மேலும் விளக்குகையில்,

“முன்னைய ஆட்சியாளர்கள் பில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்தார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த அமைச்சர்கள் மீது கூறப்படும் தொகைகள் மிகச் சொற்பமானவை.

அமைச்சர் லால் காந்தவுக்கு 40 மில்லியன் ரூபா சொத்து இருப்பதாகக் கூறப்படுவது பெரிய விடயமல்ல. 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது உழைப்பின் மூலம் இவ்வளவு தொகையைச் சேமித்திருப்பது தற்போதைய பொருளாதார நிலையில் சாதாரணமானது.

250 மில்லியன் டொலர் விவகாரம் போன்ற விடயங்களில் ஏதேனும் பலவீனம் இருந்தால், அது குறித்து அரசு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.

“கடந்த 15 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்தபோது, தற்போதுள்ள பிரதான எதிர்க்கட்சிகளிடம் எங்குமே ஒழுக்கமான அரசியல் கலாசாரத்தைக் காணவில்லை. இதனாலேயே நான் அங்கிருந்து ஒதுங்கினேன்” என்று குறிப்பிட்ட சரத் பொன்சேகா, நாட்டுப்பற்றுமிக்க, ஊழலற்ற மற்றும் புதிய அறிஞர்களைக் கொண்ட ஒரு பலமான மாற்று எதிர்க்கட்சியை உருவாக்குவதே தமது நோக்கம் என்றார்.

75 வருடங்களாக நாட்டைச் சூறையாடித் தமது பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்தவர்களை மீண்டும் நம்பினால் நாடு உருப்படாது என்று சாடிய அவர், ஜனாதிபதித் தேர்தல் குறித்துக் கனவு காணும் சஜித் பிரேமதாஸ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு மக்கள் மீண்டும் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, தற்போதைய அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையோ வரப்பிரசாதங்களையோ பெற்றுக்கொள்ளும் எண்ணம் தமக்கு இல்லை என்பதையும் அவர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.