மாத்தறை விகாரை வளாக மரத்தில் 2 வெளிநாட்டவர்கள் சடலங்களாக மீட்பு! – தற்கொலையா எனத் தீவிர விசாரணை.

மாத்தறை, திஹகொட – பலொல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள விகாரை வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் நேற்று (19) இரு வெளிநாட்டவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று திஹகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விகாரைக்கு வழிபாடுகளுக்காகச் சென்ற பிரதேச மக்களே மரத்தில் சடலங்கள் தொங்குவதைக் கண்டு உடனடியாக திஹகொட பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய பிரான்ஸ் நாட்டவர் மற்றும் 52 வயதுடைய ஸ்காட்லாந்து நாட்டவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் வெலிகமை, மிதிகம – குருபெபில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளமையுடன், நேற்றுக் காலையில் அம்பாந்தோட்டைப் பகுதிக்குச் செல்வதாகத் தெரிவித்தே விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இருந்து இரு ஜோடி காலணிகள், ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் ‘ஸ்கூட்டி’ ரக மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் வெலிகமைப் பகுதியில் வாடகைக்குப் பெறப்பட்டது என்பது இலக்கத் தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், இந்தச் சம்பவத்துக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், மாத்தறைப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமாரவின் வழிகாட்டலில் திஹகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.