இனி எங்களிடம் உணவு ஆர்டர் செய்ய முடியாது… இந்தியாவில் அமேசான் அதிரடி முடிவு!

உலகளாவிய பொருளாதார மந்த நிலையின் தாக்கமானது பல்வேறு முன்னணி நிறுவனங்களையே ஆட்டம் கான வைத்துள்ளது. கோவிட் பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியானது சங்கிலி விளைவாக பெரும்பாலான சர்வதேச நாடுகளை பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது.

இதன் நீட்சியாக கடந்த சில மாதங்களாகவே முன்னணி பெருநிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் எடுப்பதை குறைத்துக்கொண்டுள்ளன. அத்துடன் உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.

அந்த வரிசையில் கடந்த வாரம் உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. லாபமில்லாத பிரிவுகளில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக அமேசான் அறிவித்தது. இந்த நடவடிக்கை மூலம் கிட்டத்தட்ட பத்தாயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக அமேசான் புட் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை நிறுத்தவுள்ளது. இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களாக இருந்த ஸ்விக்கி, சோமேடோ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த அமேசான் புட் நிறுவனத்தை 2020ஆம் ஆண்டு தொடங்கியது. முதல்கட்டமாக பெங்களூருவில் தொடங்கிய இந்த அமேசான் புட் சேவை 2021க்குள் நாட்டின் முன்னணி நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், முழுமையாக சேவை தொடங்கிய ஓராண்டில் இந்த சேவைக்கு தற்போது மூடு விழா அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 29ஆம் தேதியுடன் அமேசான் புட் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் இனி ஆர்டர் செய்ய முடியாது. அமேசான் புட் சேவையை போலவே, அமேசான் அகாடமி என்ற ஆன்லைன் கல்வி சேவையும் இந்தியாவில் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு லாபமில்லாத பிரிவுகள் ஆள்குறைப்பு செய்து, இதில் முதலீடு செய்யும் நிதியை புதிய கட்டமைப்புகளை உருவாக்க அமேசான் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நாட்டின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டாவும் கடந்த வாரம் வருவாய் குறைவை காரணம் காட்டி 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது.

Leave A Reply

Your email address will not be published.