இலங்கையில் மூவரைப் பலியெடுத்த ‘மாண்டஸ்’ புயல்!

‘மாண்டஸ்’ புயல் தாக்கம் காரணமாக இலங்கையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று அறிவித்துள்ளது.

இன்றும் வடக்கு மற்றும் கிழக்கின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும், கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் 2.5 மீற்றர் முதல் 3.5 மீற்றர் வரை அலைகள் எழக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்புகளில் அலைகள் 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மக்களையும் சென்னை மக்களையும் அச்சுறுத்தி வந்த ‘மாண்டஸ்’ புயல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சென்னைக் கரையைக் கடந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.