காணாமல்போயிருந்த மன்னார் மீனவர்கள் இருவரும் 4 நாட்களின் பின் கண்டுபிடிப்பு!

மன்னார், முசலி – சிலாவத்துறை கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்று 4 நாட்களாகக் காணாமல்போயிருந்த இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சிலாவத்துறை, காயக்குளி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய மீனவர்கள் இருவர், கடந்த 23ஆம் திகதி சிலாவத்துறை பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இருவரும் மீண்டும் கரைக்கு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் இது குறித்து சிலாவத்துறைப் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பின்னர் பொலிஸார் ஊடாகக் கடற்படையினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.

காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணியை மேற்கொண்ட கடற்படையினர், புத்தளம் கல்பிட்டி கடற்பகுதியில் மீன்பிடிப் படகு ஒன்றில் மிதந்து கொண்டிருந்த இரு மீனவர்களையும் நேற்று மீட்டனர்.

மீன்பிடிக்கச் சென்றபோது, இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அதை இயக்க முடியாமல் இரண்டு நாட்களுக்கும் மேலாக கடலில் மிதப்பதாக மீனவர்கள் இருவரும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், குறித்த மீனவர்கள் இருவரும் தற்போது நலமுடன் இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.