மொட்டுவிலிருந்து வெளியேறியோருக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர் மக்கள்! – கோகிலா ஹர்சனி எம்.பி. நம்பிக்கை.

“தேர்தலை எதிர்கொள்வதற்கு மொட்டுக் கட்சி ஒருபோதும் பின்வாங்காது. மொட்டுவிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்குத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”

இவ்வாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி குணவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வாக்குகளை வைத்துக்கொண்டு வெற்றி பெற்ற தரப்பினர் இன்று எதிர்க்கட்சிகளில் இருந்துகொண்டு செயற்படுவதால் அது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை எந்தவிதத்திலும் பாதிக்காது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெண்கள் முன்னணி என்ற முறையில் எதிர்வரும் வாரங்களில் நாடளாவிய ரீதியில் சம்மேளனத்தை நடத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

கட்சி என்ற முறையில் எமது அரசியல் நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துக்கொண்டு செல்கின்றோம். உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். எந்தத் தேர்தலையும் வெற்றிகொள்வதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன எப்போதும் தயாராகவே இருக்கின்றது.

யார் எதனைக் கூறினாலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அஞ்சாது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் பாரிய தோல்வியைச் சந்திப்போம் என்று அனைவரும் கூறினர். எனினும், அந்தத் தேர்தலிலும் நாம் பாரிய வெற்றியைப் பெற்றோம். அதேபோன்று இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் பாரிய வெற்றியைப் பெறுவோம்.

நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றை எதிர்கொள்வதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். அதற்காகக் கிராமங்களில் உள்ள மக்கள் தயாராகவே இருக்கின்றனர்.

இந்த நாட்டுக்குச் சேவையாற்றியவர்கள் யார், சேவையாற்றாதவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

ஹெலிஹொப்டர் சின்னத்தில் இருப்பவர்களும் ஏனைய எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் எமது கட்சியிலேயே கடந்தமுறை போட்டியிட்டார்கள். இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு நன்கு பாடம் புகட்டுவார்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.