தேர்தல் குறித்து ஆணைக்குழுவே முடிவு செய்ய வேண்டும்! -அநுர சுட்டிக்காட்டு.

“தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு ஒருபோதும் அதிகாரம் இல்லை. தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவே முடிவு செய்ய வேண்டும்.”

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரகடனப்படுத்துவது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை.

தேர்தல் பிரகடனம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதனை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழு சட்டரீதியாகச் செயற்படாவிட்டால் ஜனாதிபதி நீதிமன்றத்தை நாடலாம். ஜனாதிபதியின் கருத்து நாட்டின் சட்டம் அல்ல.

தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனவரி 5ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை அறிவித்தது. இதன்படி தேர்தல்கள் ஆணைக்குழு, கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து தேர்தலுக்கான திகதி ஜனவரி 21ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

அத்துடன், அஞ்சல் மூல வாக்களிப்புத் திகதிகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசமைப்பு மற்றும் சட்பூர்வமானவை என்று தேர்தல் ஆணைக்குழு கூறுகின்றது.

இந்தநிலையில், ஜனாதிபதி தனது உள்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே நாடாளுமன்றத்தில் பொய் கூறினார்.

சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலை ஒத்திவைக்குமாறு தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி கூறினார்.

அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.

அத்துடன் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலை ஒத்திவைக்குமாறு கடிதம் கொடுத்தாலும் தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு ஒருபோதும் அதிகாரம் இல்லை. தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவே முடிவு செய்ய வேண்டும்.

எனவே, ஜனநாயகம் மற்றும் மக்களின் வாக்குரிமைக்கு எதிரான ஜனாதிபதியின் நகர்வுகளைத் தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் மக்கள் முன்வரவேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.