விமல் – கம்மன்பிலவுக்கு மஹிந்த தரப்பு வலைவீச்சு!

விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை மீண்டும் வளைத்துப் போடுவதற்கு மஹிந்த ராஜபக்ச தரப்பு நடவடிக்கை ஒன்றை திரைமறைவில் மேற்கொண்டிடுப்பதாக மஹிந்த தரப்பு வட்டாரத்தில் இருந்து அறியமுடிகின்றது.

எதிர்காலத்தில் எழப்போகும் அரசியல் பிரச்சினைகளின்போது விமல் தரப்பு மஹிந்தவுடன் இருப்பதுதான் ராஜபக்ச தரப்புக்கு வெற்றியைக் கொடுக்கும் என்று மஹிந்தவின் சகாக்கள் பலர் கருதுவதால் அவர்களின் யோசனைக்கு அமைய மீண்டும் விமல் தரப்பை மஹிந்தவுடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

13 ஆம் திருத்தச் சட்டம், அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துதல் போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் எழவுள்ளன. அப்போது விமலின் குரல் மஹிந்தவின் பக்கம் இருந்து ஒலிக்க வேண்டும் என்று அவர்கள் மஹிந்தவுக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

கடந்த வருடம் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மஹிந்த அரசியல் செயற்பாடுகள் எவற்றிலும் ஈடுபடவில்லை. இப்போது அவர் வீரியத்துடன் அரசியல் களத்தில் குதித்துள்ளார்.

விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் இப்போது களைகட்டியுள்ளது. தினமும் கூட்டங்கள் இடம்பெறுகின்றன.

மொட்டுக் கட்சியின் தலைமையகம் பத்திரமுல்லையில் அமைந்துள்ள போதிலும், இப்போது மஹிந்தவின் இந்த வீடே தலைமையகம் போல் காட்சி கொடுக்கின்றது.

மொட்டு உறுப்பினர்கள் பலர் பத்திரமுல்லையில் இடம்பெறும் கூட்டங்களைத் தவிர்த்து வருகின்றனர். அந்தக் கூட்டங்களை பஸில் ராஜபக்ச நடத்தி வருவதால் அவர்களுக்கு அதில் உடன்பாடில்லை. இதனால் இப்போது அவர்கள் மஹிந்தவின் வீட்டில் இடம்பெற்று வரும் கூட்டங்களிலேயே கலந்துகொள்கின்றனர். அவர்கள்தான் விமல் தரப்பை இணைக்கும் யோசனையை முன்வைத்துள்ளனர்.

பஸிலுக்கும் விமலுக்கும் ஆகாது. அதனால் பஸிலுடன் சேர்ந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது என்பதாலும் விமலும் மஹிந்தவும் நீண்ட நெருக்கம் கொண்டவர்கள் என்பதாலும் மஹிந்தவை இணங்க வைத்தே விமலை வளைக்கும் நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்று அறியமுடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.