‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரவேற்பு இல்லை…தமிழ்நாடு அரசு

சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து, மேற்குவங்க மாநில அரசு தடை விதித்தது. தமிழ்நாட்டில் படம் வெளியான நிலையில், எதிர்ப்பு எழுந்ததால், திரையரங்க உரிமையாளர்கள் படத்தை திரையிடுவதில்லை என முடிவெடுத்தனர்.

இந்நிலையில், படத்தின் மீதான தடை மற்றும் திரையரங்குகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்குவங்க அரசு பதிலளிக்கவும், தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இதன்படி, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட 19 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளது. படத்துக்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களே வேறு படத்தை திரையிடுவதாகவும்,இதில் அரசின் தலையீடு இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.