“நான் பிரதமர் மோடியின் மருமகள்” – மோசடி செய்த இளம் பெண்..!

காசியில் உள்ள ஓய்வு பெற்ற கர்னல் உபேந்திர ராகவ். இவருக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த பல்லியா மாவட்டத்தில் உள்ள கோமல் பாண்டே என்ற பெண்ணுடன் செல்போன் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நாட்கள் கழித்து கோமல் பாண்டே, உபேந்திர ராகவ்விற்கு, வெரோணிகா என்ற பெண்ணை அறிமுகம் செய்திருக்கிறார்.

வெரோணிகா, தான் மோடியின் மருமகள் என கூறி உபேந்திர ராகவை நம்ப வைத்திருக்கிறார். மேலும், பங்கு சந்தையில் அவரை முதலீடு செய்ய சொல்லி, அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறி இருக்கிறார்.

மேலும், பங்கு சந்தையில் கர்னல் பெயரில் தான் முதலீடு செய்வதாகவும், அதற்கு 21 லட்ச ரூபாயை தனது நண்பருக்கு அனுப்பவும் கூறி இருக்கிறார் வெரோணிகா. இதை நம்பிய கர்னல் உபேந்திர ராகவ், ரமேஷ் சர்மா என்பவரின் வங்கி கணக்கிறகு 21 லட்சம் ரூபாயை அனுப்பி இருக்கிறார்.

இதற்கு பிறகு, அந்த பணம் என்ன ஆனது என கேட்டபோது, ரூ. 18 லட்சத்திற்கான போலி செக்கை வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பி இருக்கிறார் வெரோணிகா. அதற்கு பிறகு உபேந்திர ராகவால் வெரோணிகாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டிருப்பதாக உணர்ந்த கர்னல், காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில், வெரோணிகா மீதும், ரமேஷ் சர்மா மீதும் 420, 406 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற கர்னலிடம் மோடியின் மருமகள் என கூறி, பணத்தை ஏமாற்றியது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.