தமிழ் எம்.பிக்கள் அடங்காவிடின் சிறைதான் வாழ்க்கை! – மிரட்டுகின்றார் சரத் வீரசேகர.

“தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்ததுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுத் துள்ளிக் குதிக்காமல் இருக்க வேண்டும். அவர்கள் அடக்கிக் வாசிக்க வேண்டும். இல்லையேல் சிறையில்தான் அவர்கள் அடைக்கப்படுவார்கள்.”

இவ்வாறு மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போது அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்றச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி எதனையும் சாதிக்கலாம் என்று கஜேந்திரகுமார், சாணக்கியன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றார்கள். இது அவர்களின் அறியாத்தனம் என்றே கூறவேண்டும். இதற்காக அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பொலிஸாருடன் சண்டித்தனம் காட்டும் அளவுக்குத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் துணிவு வந்துள்ளது. இப்படியானவர்களைக் கைது செய்து அவர்களுக்குப் பிணை வழங்காமல் சிறையில்தான் தொடர்ந்து அடைத்து வைத்திருக்க வேண்டும்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்ச்சவடால் நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி எடுபடாது. முதலில் அவர்கள் சட்டம், ஒழுங்கு தொடர்பில் நன்றாகத் தெளிவடைந்திருந்த வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.