குருந்தூர் மலை குறித்து பாடமெடுத்த ஜனாதிபதி : தொல்பொருள் துறை இயக்குனர் இராஜினாமா(முழு வீடியோ)

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு ,தமிழ் பௌத்தர்கள் குறித்து வரலாற்றுப் பாடம் எடுத்த ஜனாதிபதி !

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் , அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தின் நகல் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், பதவி விலகுவதற்கான காரணம் எதுவும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

தொல்பொருள் பகுதிக்கு சொந்தமான காணிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பாளர் நாயகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையாக சாடியிருந்தார்.

பேராசிரியர் அனுர மானதுங்கவின் திடீர் பதவி விலகல் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு குருந்தி ரஜ மகா விகாரைக்காக ஒதுக்கப்பட்ட 279 ஏக்கர் காணியில் 79 ஏக்கர் காணியை அகற்றுவது சாத்தியமற்றது என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மறுத்தமைக்கு எதிராக , ஜனாதிபதி குற்றம் சுமத்துகின்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.(கீழே காணோளி இணைக்கப்பட்டுள்ளது)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கவிடம், “எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்றை கற்பிக்கட்டுமா?” என வாதிடும் இந்த வீடியோவே பெரும் சர்ச்சையாகி உள்ளது.

கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உரையாடல் இடம்பெற்றது.

குருந்தூர் மலை விகாரைக்கான தொல்பொருள் இடத்திற்காக சுமார் 270 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவித்தபோது, ​​அந்த விகாரை (வரலாற்று குருந்தி ரஜ மகா விகாரை) அனுராதபுரம் மகா விகாரைக்கான நிலத்தை விட பெரியதா என ஜனாதிபதி வினவினார்.

“உங்களுக்கு ஏன் 275 ஏக்கர் தேவை? மகாவிகாரை விட பெரியதா? மஹா விகாரை, ஜேதவனாராமய மற்றும் அபயகிரி ஆகிய மூன்று விகாரைகளது பரப்பளவே 100 ஏக்கர் இல்லை. இந்த விகாரை அதைவிட மிக பெரிய விகாரையா? தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த பிரதேசம் அது. ஆனாலும் விகாரைக்கான நிலம் 275 ஏக்கர் ஆக முடியாது. அங்கு ஒரு தமிழ் பௌத்த விகாரை இருந்தது. அங்கு பொத்குக என ஒரு தலைமை அமைச்சர் இருந்தார். அவர் குறித்து தெரியுமா? அவர் தமிழர். அவர் 7 முதல் 8 சிங்கள அரசர்களை அவர் நியமித்தார். அந்த இடம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வளவு பரப்பளவு விகாரைக்கு உரியதாக இருக்க வாய்ப்பில்லை. இவை முன்னர் லைட் ஹவுஸ்களாக இருந்தன. இவற்றை பார்த்துதான் படகுகளில் முன்னோர்கள் பயணித்தார்கள். இந்த ஹவுஸ்களை பௌத்த பிக்குகள் காத்து வந்தார்கள். திரியாயவில் படகில் ஏறினால் , ஹொரவபதான வரை வரலாம். ஹொரவபதானவிலிருந்து ஒருநாள் பயணம் செய்து அனுராதபுரத்தை அடையலாம். அனுராதபுரத்திலிருந்து 1 1/2 நாள் பயணமாக மல்வத்து ஒய , மல்வத்து ஒயவிலிருந்து மன்னார் வரை பயணித்தார்கள். இந்த வழி இந்திய வங்காள விரிகுடா வழியாக அராபிய கடலை அடைய முடியும். இதைக் கூட புரியாமல்தானே மலர் வைக்கிறீர்கள். இது புரியாது போனால் நான் வகுப்பு எடுக்கிறேன். நட்டியுள்ள எல்லை கற்களை நீங்கள் அகற்றுகிறீர்களா? இல்லை, நான் அகற்றட்டுமா? ” என்றார் ஜனாதிபதி .

அதை தானே செய்வதாக தொல்பொருள் துறை இயக்குனர் அப்போது உறுதியளித்தார்.

எவ்வாறாயினும், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்ததாக அனுர மனதுங்க தற்போது தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் , சாணக்கியன் , சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அப்பகுதி நிலை குறித்து தெளிவுபடுத்தினர்.

அன்றைய முழு வீடியோ :

Leave A Reply

Your email address will not be published.