நிலவின் புதிய படங்களை வெளியிட்ட இஸ்ரோ

சந்திராயன் 3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது.

பின்னர் கடந்த 18-ஆம் தேதி விண்கலத்தில் இருந்த பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக லேண்டரின் சுற்று வட்டப்பாதை ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் குறைக்கப்பட்டது.

தற்போது நிலவிலிருந்து அதிகபட்சம் 134 கிலோமீட்டர் என்ற தொலைவில் லேண்டர் பயணித்து வருகிறது . இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்திராயன்3 எடுத்த நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அவை நிலவில் தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்து வரும் விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா எடுத்த புகைப்படங்கள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி எடுக்கப்பட்டவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.