தேன் சேகரிக்க சென்றவர்களுக்கு கிடைத்த தங்க புதையல் !

ஆந்திர மாநிலம் நெல்லூரில் வனப்பகுதியல் தேன் சேகரிப்பவர்களுக்கு தங்க புதையல் கிடைத்துள்ளது. புதையலை விற்று சொகுசாக வாழ்ந்தவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொதலக்கூர் கிராமத்தில் ஒரு வனப்பகுதி உள்ளது. பொதலக்கூர் வனப்பகுதியில் ஒரு அங்கம்மா கோவிலும் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவில் முறையாக பராமரிக்கப்படாமல் பாதி இடிந்த நிலையில் உள்ளது.

அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த கோவிலின் இடிபாடுகளுக்கு இடையே தேன் கேசரிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஒரு பழமையான குடம் புதையலாக கிடைத்துள்ளது. அந்த குடத்தில் தங்க காசுகள், தங்க சங்கிலிகள் என ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்துள்ளன.

தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக தேன் சேகரித்து விற்பனை செய்து வறுமையில் இருந்துள்ளனர் இந்த குடும்பத்தினர். இந்நிலையில் மூன்று இளைஞர்களும் திடீரென்று வசதி வாய்ப்புகளுடன் சுற்ற துவங்கினர். இதனால் கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு மூன்று பேருக்கும் பணம் எப்படி கிடைத்தது என்று விசாரிக்க துவங்கினர். கிராம மக்கள் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு புதையல் கிடைத்த சம்பவம் வெளியே தெரியவந்தது.

யாரோ ஒருவர் போலீசில் போட்டுக் கொடுக்க, பொதலகூர் போலீசார் அப்போது முதல் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். புதையலை எடுத்த இளைஞர்கள் புதையல் இருந்த குடத்தை பொதலக்கூர் ஏரியில் வீசியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் 10 பேரை அழைத்து வந்து ஏரியில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், புதையல் பொருட்கள் இருந்த குடத்தை கைப்பற்றினர். புதையல் எடுத்திருப்பதை உறுதி செய்த போலீசார், புதையலை எடுத்த இளைஞர்கள் அஜித், அமரன், வெங்கடேஸ்வரலு ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் புதையலை சென்னையை சேர்ந்த ஒருவரிடம் மொத்தமாக விற்பனை செய்தது தெரியவந்தது. சென்னைக்கு சென்ற நெல்லூர் போலீசார் புதையலை வாங்கிய நபரை பிடித்து மொத்த புதையலையும் பறிமுதல் செய்தனர். 14 லட்சம் ரூபாய் பணம், 21 பவுன் தங்க ஆபரணங்கள், 436 சிறிய வகை தங்க நாணயங்கள்,63 பெரிய தங்க நாணயங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் புதையலை விற்று கிடைத்த பணத்தில் இளைஞர்கள் வாங்கிய ஒரு கார், ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். புதையல் விவகாரம் காட்டுத் தீயாய் பரவ, பலர் அங்கம்மா கோவிலை சுற்றி வேறு புதையல்கள் இருக்குமா என தேட ஆரம்பித்து விட்டனர். இந்த பகுதியில் புதையல் கிடைக்கும் என்ற ஆசையில் யாராவது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.