ராவணன், ஔரங்கசீப், பாபரால்கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை: யோகி பேச்சு

ராவணன், பாபர், ஔரங்கசீப் போன்ற வரலாற்று நாயகர்களால்கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெளவில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் முயற்சிகளை விமரிசித்தார்.

சனாதன தர்மத்தின் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்துவது மனிதகுலத்திற்கு ஆபத்து. சனாதன தர்மத்தை இழிவாகப் பேசுபவர்கள் தங்கள் செயல்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். வரலாற்று ரீதியாக அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் அவர்களுக்கான தேவையின்போது, அவர்களின் நம்பிக்கைகளுக்கு சனாதன தர்மம் ஆதரவாக இருந்துள்ளது.

ராவணன், பாபர், ஔரங்கசீப் போன்ற வரலாற்று நாயகர்களால்கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை.

சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் கஷ்டத்தில் இருக்கும் பிற மதத்தினருக்கு உதவாமல் இருந்ததில்லை. நாங்கள் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவர்கள் என்று ஒருபோதும் சொல்லவில்லை. உண்மை ஒன்றுதான் என நாங்கள் எப்போதும் நம்புகிறோம், ஞானிகள் வெவ்வேறு விகிதங்களில் இதனைப் பார்க்கின்றனர்.

இன்னும் இதனை புரிந்துகொள்ள முடியவில்லை எனில், சூரியனை நோக்கி எச்சில் துப்பினால் அது அவர்கள் மேல்தான் விழும். அவர்களின் அடுத்த தலைமுறைகள்தான் வெட்கப்படும் என்றார்.

முன்னதாக சென்னையில் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’ கடந்த செப். 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டெங்கு, மலேரியாவைப் போல சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அவர் பேசியதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதற்கு விளக்கமளித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட, அதற்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.