திலீபனின் ஊர்திப் பவனியால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு – நாடாளுமன்றில் தயாசிறி கொதிப்பு.

“திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவனி மூலம் தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றம் பெறும் நிலை காணப்படுகின்றது. ஆகவே, இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“திலீபனின் நினைவேந்தல் தற்போது அனுஷ்டிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராகத் திலீபன் இருந்தாலும் அவர் அஹிம்சை வழியில் போராடி இறுதியில் உயிர்த் தியாகம் செய்தார்.

திலீபனின் நினைவேந்தல் தற்போது பிரதான பேசுபொருளாகக் காணப்படுகின்றது. திலீபனின் உருவப் படத்தைச் சுமந்த வண்ணம் ஊர்திப் பவனி மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் செல்லும்போது இடைவழியில் தாக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பினரால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிங்களவர்கள் வசிக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிங்களவர்கள் அதிகளவில் வாழும் பகுதிக்குச் செல்லாமல் இந்த ஊர்தி பேரணி திருகோணமலைக்குச் சென்றிருக்கலாம். ஆனால், அவ்வாறு செல்லாமல் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் சிங்களவர்களின் கோபத்தைத் தூண்டி விடும் வகையில் இந்த ஊர்திப் பவனி சென்றுள்ளது.

நான் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்குஎதிராகவும் உரையாற்றவில்லை. திலீபனின் நினைவு ஊர்திப் பவனியால் தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் நிலை காணப்படுகின்றது.

அனுமதி பெறாத ஒரு பவனிக்குப் பொலிஸார் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள் என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது. ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும். திலீபனின் நினைவேந்தல் பவனி தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவிக்க வேண்டும்.” – என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, “இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.